சமூக மற்றும் அரசியல் உள்கட்டமைப்பு
கட்டற்ற மென்பொருள் குறித்து, பலரும் முதலில் கேட்கும் சில கேள்விகள், “இது எவ்வாறு
வேலைசெய்கிறது? ஒரு திட்டத்தை தொடர்ந்து நடத்த உந்துசக்தியாக இருப்பது எது? முடிவுகளை யார்
எடுக்கிறார்கள்?” என்பவையே. தகுதிக்கேற்ற மரியாதை, ஒத்துழைப்பு உணர்வு, நிரலின் தரம் ஆகியவை ]குறித்த சாந்தமான மறுமொழிகள் திருப்தியை தருவதில்லை. உண்மை என்னவெனில், இவை எளிதான
கேள்விகள் அல்ல. திறமை, தகுதி, ஒத்துழைப்பு, நிரலின் தரம் ஆகியவற்றிற்கு முக்கிய பங்கு உள்ளதெனினும்,
ஒவ்வொரு நாளும் திட்டங்கள் எப்படி நடத்தப்படுகின்றன என்பது பற்றி, இவை மிக குறைவாகவே
விளக்குகின்றன. முரண்பாடுகளை களைவதெப்படி என விவரிப்பதில்லை.
இந்த அத்தியாயத்தில், பல வெற்றிகரமான திட்டங்களை கட்டமைக்க காரணமாக இருந்த
பொதுவான அச்சாணிகளைப்பற்றி காணலாம். இங்கே வெற்றிகரமான திட்டத்தின் வரையறை, தொழில்நுட்ப
தரத்தில் மட்டுமல்லாமல், ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும், தொடர்ந்து உயிர்ப்புடன் இருப்பதையும்
உள்ளடக்கியது. ஆரோக்கியமான செயல்பாடு என்பது, நிரலில் புதிய பங்களிப்புகளையும், புதிய
உருவாக்குநர்களையும், இயங்கிவரும் திட்டத்தில் எவ்வாறு உள்ளடக்குவது என்பதிலும், வழுக்கள் குறித்த
புகார்களின் மீது விரைவாக பதிலளிப்பதிலும் தான் இருக்கிறது. தொடர்ந்து உயிர்ப்புடன் இருப்பதென்பது, ஒரு
திட்டம் எந்தவொரு தனிமனித பங்களிப்புகளின் மீதும், ஆதரவின் மீதும் சார்ந்திராமல்
இருப்பதாகும்—ஒரு திட்டத்தை துவங்கும்பொழுது இருந்த உருவாக்குநர்கள் அனைவரும் வேறு
திட்டங்களுக்கு சென்றபிறகும், திட்டம் தொடர்ந்தால், அது உயிர்ப்புடன் இருக்கிறது என பொருள்
கொள்ளலாம். தொழில்நுட்ப ரீதியில் வெற்றியடைவது மிக கடினமானதல்ல. ஆனால், வலுவான உருவாக்குநர்
குழுவும், சமூக அடித்தளமும் இல்லையெனில், ஆரம்பகால வெற்றிக்குப்பின்னும், அல்லது கவனத்தை ஈர்க்கும்
பங்களிப்பாளர்கள் பிரிந்து சென்ற பின்னும், ஒரு திட்டத்தின் வளர்ச்சியை சமாளிப்பது சிரமமாக
இருக்கலாம்.
இந்த முறையில் வெற்றியடைய பல வழிகள் உள்ளன. சில குழுக்கள், விவாதங்களுக்கு
தீர்வுகாணவும், புதிய உருவாக்குநர்களை அழைக்கவும், விடுவிக்கவும், புதிய அம்சங்களை திட்டமிடவும்
முறையான கட்டமைப்பை உள்ளடக்கி செயல்படுகின்றன. மற்ற குழுக்கள், சாதாரண கட்டமைப்பை
உள்ளடக்கியதோடு, சுய கட்டுப்பாட்டையும், நேர்மையான சூழலையும் உருவாக்கி, குழுவினரின் நம்பிக்கையைப்
பெற்ற கட்டுப்பாட்டு கட்டமைப்பை நடைமுறைப்படுத்துகின்றன. இருவழிகளும் ஒரே பலனைத்தருகின்றன:
பங்களிக்கும் அனைவராலும் புரிந்துகொள்ளப்பட்ட, பழக்கவழக்கங்கள் மற்றும் செயல்முறைகளின் ஆதரவு பெற்ற,
நிறுவன நிரந்தரத்தன்மையை அளிக்கின்றன. இந்த அம்சங்கள், மத்தியில் நிர்வகிக்கப்படும் குழுக்களை விட,
சுய ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், சில அழுகிய ஆப்பிள்கள், ஒரு முழு
கூடையையும் கெடுத்துவிடும் தன்மையுடையது என, சுய ஒருங்கிணைப்பு குழுவினர், சில காலத்திற்காவது
நினைவில் கொண்டிருப்பர்.
பிரியூன்றுமை
ஒரு கட்டற்ற மென்பொருள் திட்டத்தில், நிரலர்களை ஒன்றிணைத்து, தேவையான
பொழுது சமரசம் செய்துகொள்ளவும் இணங்கவைக்கும், ஒரு தவிர்க்க முடியாத காரணியாக,
பிரியூன்றுமை விளங்குகிறது. எந்தவொரு தனிநபராலும், நிரலின் நகலையெடுத்து,
அதிலிருந்து ஒரு போட்டி திட்டத்தை உருவாக்கும் திறன் பிரியூன்றுமை எனப்படுகிறது. இப்போட்டித்திட்டம்
பிரியூன்று என்று அழைக்கப்படுகிறது. இதில் ஒரு முரண்பாடான விடயம்
என்னவெனில், கட்டற்ற மென்பொருட்களில், பிரியூன்றுகளை உருவாக்குவதற்கான
சாத்தியமே, உண்மையான பிரியூன்றுகளைவிட வலுவான சக்தியாகும். கட்டற்ற
மென்பொருட்களில் பிரியூன்றுகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. ஒரு பிரியூன்று, திட்டத்திலுள்ள
அனைவருக்கும் பாதகமாக அமைவதால், (அதற்கான காரணிகள்
இங்கே
விவரிக்கப்பட்டுள்ளன), ஒரு பிரியூன்றுதலின் அபாயம் அதிகரிக்கும்பொழுது, அதை தவிர்ப்பதற்காக, குழுவினர்
சமரசத்திற்கு அதிகமாக இணங்குகின்றனர்.
கட்டற்ற மென்பொருள் திட்டங்களில், உண்மையான சர்வாதிகாரிகள் இல்லாமல்
இருப்பதற்கு, பிரியூன்றுகளுக்கான சாத்தியமே காரணமாகும். கட்டற்ற மென்பொருள் திட்டங்களில் சிலரை,
சர்வாதிகாரி அல்லது கொடுங்கோலன் என அழைப்பதை பரவலாக கேள்வியுற்றோருக்கு, இக்கூற்று ஆச்சரியமாக
இருக்கலாம். ஆனால், இங்கே குறிப்பிடப்படும் கொடுங்கோன்மை, அந்த சொல்லின் பாரம்பரிய
பொருளிலிருந்து சற்று மாறுபடுகிறது. இதை புரிந்துகொள்ள, இரு நாடுகளை உதாரணமாக
எடுத்துக்கொள்ளலாம். முதலாவது நாட்டில், அரசன் என்ன செய்தாலும், மக்கள் அவனோடு இருக்கவேண்டிய
கட்டாயத்தில் இருக்கின்றனர். இரண்டாவது நாட்டில், எந்தவொரு தருணத்திலும், அந்நாட்டை பிரதியெடுத்து,
அப்பிரதியை, தங்கள் விருப்பபடி ஆண்டுகொள்ளும் திறன்பெற்ற மக்கள் இருக்கின்றனர். இதில் இரண்டாவது
நாட்டு அரசரின் ஆட்சி, முதலாம் நாட்டு அரசரின் ஆட்சியிலிருந்து வேறுபட்டிருக்குமல்லவா? கட்டற்ற
மென்பொருள் திட்டங்களை இரண்டாவது நாட்டிற்கு ஒப்பாக கருதலாம்.
இதனாலேயே, முறையாக மக்களாட்சி பெற்ற அமைப்புகள் என அறிவிக்கப்படாத
அமைப்புகள் கூட, சில முக்கியமான முடிவுகளையெடுக்க, மக்களாட்சி முறையை பின்பற்றுகின்றன.
பிரதியெடுக்கும் திறன், பிரியூன்றுமையை குறிக்கிறது. பிரியூன்றுமை ஒருமித்த கருத்தை குறிக்கிறது. குழுவினர்
அனைவரும், குறைகூறும் மனப்பான்மையின்றி, வஞ்சகநோக்கமின்றி, தங்கள் விருப்பத்துடன், ஒரு தனிநபரை
சர்வாதிகாரியாக (பிரபலமான எடுத்துக்காட்டாக, லினக்ஸ் கரு உருவாக்கத்தில் லினஸ் டார்வால்ட்ஸ்)
தேர்ந்தெடுக்கலாம். இந்த சர்வாதிகாரிக்கு திட்டத்தின் மீது எந்தவொரு விசேஷ
பிடிப்பும் இல்லை. நிரலின் மாற்றங்கள் குறித்தும், அதன் பயன்பாடுகள் குறித்தும் முடிவெடுக்கும் சக்தியை,
கட்டற்ற மென்பொருள் உரிமங்கள், அனைவருக்கும் சமமாக வழங்கியிருப்பதே அதன் முக்கிய அம்சம் ஆகும்.
ஒருவேளை சர்வாதிகாரி, தொடர்ந்து மோசமான முடிவுகளை எடுத்துவந்தால், அது குழுவினரிடையே
அதிருப்தியை ஏற்படுத்தும். அதைத்தொடர்ந்து ஒரு கிளர்ச்சி ஏற்பட்டு, திட்டம் பிரியூன்றப்படலாம்.
சர்வாதிகாரிகள் முதலில் சமரசத்தை நாடுவதால், இதுபோன்ற நிகழ்வுகள் அரிதாகின்றன.
திட்டத்தின் மீது, ஒருவர் செலுத்தும் அதிகாரத்திற்கு, பிரியூன்றுமை ஒரு உச்சவரம்பை
விதிப்பதாலேயே, திட்டங்களை வழிநடத்துவதில் முக்கியமான வேறுபாடுகள் ஏதுமில்லை எனப்பொருள்கொள்ள
முடியாது. வேறுவழிகள் ஏதும் இல்லாதபொழுது மட்டுமே திட்டத்தை பிரியூன்றவேண்டும். ஒவ்வொரு முடிவிற்கும்
பிரியூன்றுமை குறித்த கேள்வியில் வந்து நிற்பது விரும்பத்தக்கதல்ல. மேலும், குழுவினரை அது
சலிப்பூட்டுவதோடு, தங்கள் பணியை செய்வதற்கான ஆற்றலையும் உறிஞ்சியெடுத்துவிடும். அடுத்துவரும் இரு
பகுதிகளில், பெரும்பாலான முடிவுகளை சுமூகமாக எடுக்கவல்ல, இருவேறு முறைகளைப்பற்றி ஆய்ந்தறியலாம்.
இவ்விருமுறைகளும் நடைமுறைப்பழக்கங்களின் எதிரெதிர் எல்லைகளாகக்கொள்ளலாம். பெரும்பாலான
திட்டங்கள் இவையிரண்டிற்கும் இடைப்பட்ட நிலையிலிருக்கின்றன.
இரக்கமுள்ள சர்வாதிகாரிகள்
இந்த இரக்கமுள்ள சர்வாதிகாரி முறையின் பெயருக்கேற்ப,
இறுதி முடிவு எடுக்கும் பொருப்பு, தனது ஆளுமை மற்றும் அனுபவத்தின் மூலம், இப்பொருப்பை சாமர்த்தியமாக
கையாளும் ஒருவரிடம் மட்டுமே இருக்கும்.
“இரக்கமுள்ள சர்வாதிகாரி" என்ற பதம் பெருமளவில் பயன்படுத்தப்பட்டாலும், இந்த
பொறுப்பினை வகிப்பவர்கள், அந்த சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நடுவர்களாகவோ, நீதிபதிகளாகவோ தான்
இருக்கின்றனர். இந்த இரக்கமுள்ள சர்வாதிகாரிகள், எல்லா முடிவுகளையும் தாங்களாகவே எடுப்பதில்லை.
பெரும்பான்மையான முடிவுகளைக்கூட இவர்கள் தீர்மானிப்பதில்லை. ஒரு திட்டத்தின் அனைத்து பிரிவுகளிலும்,
எப்பொழுதும் சிறந்த முடிவுகளையே எடுக்கத்தேவையான எல்லா நிபுணத்துவமும், தனியொருவரிடம் இருப்பது
சாத்தியமல்ல. மேலும், திட்டத்தின் பாதை குறித்த முடிவுகளில், தங்களுடைய செல்வாக்கு இல்லையெனில்
தரமான உருவாக்குநர்கள் திட்டத்தில் நீடிக்கமாட்டார்கள். இதனால், இரக்கமுள்ள சர்வாதிகாரிகள், பொதுவாக
அதிக ஆதிக்கம் செலுத்துவதில்லை. மாறாக, விடயங்களை அதன் போக்கிலேயே, விவாதங்களின் மூலமும்,
பரிசோதனைகளின் வாயிலாகவும், சரிசெய்கின்றனர். இவ்விவாதங்களில் தாமும், ஒரு சாதாரண நிரலராகவே
பங்கேற்பதுடன், அத்துறை சார்ந்த நிபுணர்களிடம் முடிவெடுக்கும் பொருப்பை அளிக்கின்றனர். இப்படிகளின்
மூலம் எந்தவொரு முடிவையும் எட்டமுடியாது என்றும், நிரலாக்கம் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதற்காக,
குழுவினரில் பெரும்பான்மையானோர், முடிவை நோக்கி திட்டத்தை, தான் , வழிநடத்திச்செல்லவேண்டும் என
விரும்புகின்றனர் என்றும், திட்டவட்டமாக தெரிந்தபின்னரே, இந்த இரக்கமுள்ள
சர்வாதிகாரிகள் ஒரு தீர்மானத்திற்கு வருகின்றனர். அதிகாரத்தின் மூலம் முடிவுகளை எடுக்க தயங்குவதே, இந்த
சர்வாதிகாரிகளில் பலரிடம் காணப்படும் சிறப்பம்சமாகும். இவர்கள், இந்த பொறுப்பை நீண்டகாலம் வகிப்பதற்கு
முக்கிய காரணமும் இதுவேயாகும்.
யாரால் நல்ல இரக்கமுள்ள சர்வாதிகாரியாக இருக்கமுடியும்?
ஒரு இரக்கமுள்ள சர்வாதிகாரிக்கு பல முக்கிய குணங்கள் இருக்கவேண்டும்.
முதலாவதாக, திட்டத்தின் மீது தனக்குரிய செல்வாக்கு குறித்து நன்றாக அறிந்திருக்கவேண்டும். இதனால்,
அவர்களுக்கு சுய கட்டுப்பாடு வருகிறது. குழுவினர், தங்கள் கருத்து வேறுபாடுகளை முன்வைப்பதில் எந்த
பயனுமில்லை என எண்ணுமளவிற்கு, ஒரு விவாதத்தின் துவக்கத்திலேயே, திட்டவட்டமாக கருத்துக்களையும்,
முடிவுகளையும் எவரும் முன்வைக்கக்கூடாது. தங்கள் கருத்துக்களை, முட்டாள்தனமான கருத்துக்களைக்கூட,
சுதந்திரமாக பகிர்ந்துகொள்ள முடியவேண்டும். சில நேரங்களில், இரக்கமுள்ள சர்வாதிகாரியும் சில
முட்டாள்தனமான கருத்துக்களை பதிவுசெய்வதை தவிர்க்க முடியாது. ஆகையால், குழுவிலிருக்கும் ஒருவர்,
ஒரு தவறான முடிவெடுக்கும்பொழுது, அதை அடையாளம்கண்டு ஒப்புக்கொள்ளும் குணம் இந்த
பொருப்பிலிருக்கும் நபருக்கு இருக்கவேண்டும். எந்தவொரு நல்ல நிரலருக்கும்,
அதிலும் ஒரு திட்டத்தில் நீண்டநாள் பங்கேற்றிருக்கும் நிரலருக்கு இக்குணமிருப்பது அவசியம். இதில் ஒரு
வித்தியாசம் என்னவென்றால், இந்த இரக்கமுள்ள சர்வாதிகாரி, தனது நம்பகத்தன்மைக்கு ஊறு
விளைவதைப்பற்றி கவலைப்படாமல், அவ்வப்போது சில முட்டாள்தனமான கருத்துக்களை முன்வைக்கலாம்.
ஆனால், அதிக அனுபவமில்லாத நிரலர்களுக்கு, தங்கள் கருத்துக்கள் மீதான விமர்சனத்தை எண்ணி, அவற்றை
வெளிப்படுத்த தயக்கமிருக்கலாம். ஆகையால், இரக்கமுள்ள சர்வாதிகாரி, தனது விமர்சனங்களையும்,
மாற்றுகருத்துக்களையும் முன்வைக்கும்பொழுது, தொழில்நுட்ப ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் அவை
ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களைக்குறித்து ஆழ்ந்து சிந்திக்கவேண்டும்.
இந்த இரக்கமுள்ள சர்வாதிகாரி, தன் குழுவிலுள்ள அனைவரைவிடவும் அதிக
நுட்பத்திறன் கொண்டவராக, இருக்கவேண்டிய அவசியமில்லை. தன்னிச்சையாக
நிரலில் வேலை செய்யும் திறன் கொண்டவராகவும், எந்தவொரு மாற்றத்தை பற்றி நன்கு
புரிந்துகொண்டவராகவும், அதன் மீது தன் கருத்திடக்கூடியவராகவும் இருக்கவேண்டியது
அவசியம். இந்த இரக்கமுள்ள சர்வாதிகாரி என்ற பொருப்பு, அதீத நிரலாக்க
திறன் மூலம் பெறக்கூடியதோ, தக்கவைத்துக்கொள்ளக்கூடியதோ அல்ல. ஆனால், அனுபவமும்,
திட்டத்தைக்குறித்த அறிவும் அவசியம். நல்ல திட்டத்தை கொடுக்கக்கூடியவராக இருக்கவேண்டும் என்பதில்லை. ஆனால், நல்ல திட்டம் யாரிடமிருந்து வந்தாலும், அதை கண்டறிந்து அங்கீகரிக்கக்கூடியவராக
இருக்கவேண்டும்.
பொதுவாக, ஒரு திட்டத்தின் நிறுவுனரே, அதன் இரக்கமுள்ள சர்வாதிகாரியாகவும்
இருக்கின்றனர். நுட்பத்திறன், பிறரை தன் திட்டத்தில் ஈடுபடுத்திக்கொள்ளும் திறன், போன்ற ஒரு திட்டத்தை
வெற்றிகரமாகத் துவங்க தேவையான பண்புகள் தான் ஒரு இரக்கமுள்ள சர்வாதிகாரிக்கும் தேவைப்படுகின்றன.
திட்டத்தின் நிறுவுனருக்கு, குழுவினரிடையே இயல்பாக ஒரு மூப்பும் கிடைத்துவிடுகிறது. இதனால், இந்த
சர்வாதிகாரப்பாதை, ஒரு தடைகள் குறைவாக உள்ள பாதையாக அனைவருக்கும் தெரிகிறது.
பிரியூன்றுமை என்பது இருவழிப்பாதை என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
குழுவின் பிற உறுப்பினர்களைப்போலவே, இரக்கமுள்ள சர்வாதிகாரியும் ஒரு திட்டத்தை பிரியூன்றலாம். சில
சமயங்களில், திட்டத்தின் போக்கு குறித்து, தனது விருப்பமும், குழுவில் பெரும்பான்மையானோரின் விருப்பமும்
வேறுபட்டிருக்கும் பொழுது, சில இரக்கமுள்ள சர்வாதிகாரிகள் சில திட்டங்களை பிரியூன்றியுள்ளனர்.
பிரியூன்றுமையின் காரணமாக, ஒரு முறைமையின் நிர்வாக சிறப்புரிமைகளை இரக்கமுள்ள சர்வாதிகாரி
பெற்றிருக்கிறாரா என்பது ஒரு பொருட்டாக அமைவதில்லை. வழங்கியின் மீதான அதிகாரமே,
இறுதியானதென்று சிலர் எண்ணுகின்றனர். ஆனால் உண்மையில் இது பொருத்தமானதன்று. திட்டத்தின் நிரல்
களஞ்சியம் இருக்கும் ஒரு வழங்கியில், உறுப்பினர்களின் கடவுச்சொற்களை சேர்க்கவோ, நீக்கவோ இருக்கும்
அதிகாரம், அந்த வழங்கியிலுள்ள நிரல் நகலுக்கு மட்டுமே பொருந்தும். தொடர்ந்து இந்த அதிகாரத்தை
தவறாக பயன்படுத்தும்பொழுது, இரக்கமுள்ள சர்வாதிகாரியோ, அல்லது பிற உறுப்பினர்களோ, திட்டத்தின்
நிரலாக்கத்தை வேறொரு வழங்கிக்கு எடுத்துச்செல்கின்றனர்.
உங்கள் திட்டத்திற்க்கு ஒரு இரக்கமுள்ள சர்வாதிகாரியின் அவசியம் இருக்கிறதா, அல்லது,
வேறு சில குறைந்த மையப்படுத்தப்பட்ட அமைப்புகளே போதுமானதா என்பது, இந்த இரக்கமுள்ள
சர்வாதிகாரியின் பாத்திரத்தை யார் ஏற்கிறார்கள் என்பதை பொருத்தது. இரக்கமுள்ள சர்வாதிகாரியாக யார்
இருக்கவேண்டுமென்பது குழுவினர் அனைவருக்கும் தெளிவாக தெரியும்பொழுது, நாம் அவ்வழியிலேயே
தொடரலாம். ஆனால், இரக்கமுள்ள சர்வாதிகாரிக்கான வேட்பாளர்கள் யாரென தெளிவாக
தெரியவில்லையென்றால், அத்திட்டம், அடுத்த பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது போல, பரவலாக்கப்பட்ட
முடிவெடுக்கும் முறைமையை பின்பற்றவேண்டும் என்பது ஒரு பொதுவிதி.
ஒருமித்த கருத்தின் அடிப்படையிலான ஜனநாயகம்
திட்டங்கள் வெகுநாட்களாக இயங்கிவரும்பொழுது, அவை இரக்கமுள்ள சர்வாதிகாரி மாதிரியிலிருந்து விலகி, திறந்த ஜனநாயக முறையை நோக்கி நகர்கின்றன. இரக்கமுள்ள சர்வாதிகாரிகள் மீதான வெறுப்பு, இதற்கு காரணமல்ல. உயிரியல் ரீதியில் ஒப்புநோக்கும்பொழுது, குழு சார்ந்த ஆட்சிமுறை, பரிணாம ரீதியில் நிலைத்தன்மை பெற்றதாக உள்ளது. ஒரு இரக்கமுள்ள சர்வாதிகாரி தன் பதவியிலிருந்து விலகும்பொழதும், முடிவெடுக்கும் பொறுப்பினை குழுவினரிடையே சீராக பரப்புவதற்கு முனையும்பொழுதும், குழுவிற்கு ஒரு புதிய, சர்வாதிகாரமற்ற அரசியலமைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைகிறது. குழுவிற்கு வழங்கப்படும் முதல் சில வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்தாமல் போனாலும், இறுதியில் இந்த மாற்றம் நிகழ்ந்தேயாகவேண்டும். அப்படியொரு மாற்றம் நிகழ்ந்தபின்பு, அதைத் அரிதாகவே திரும்பப்பெறப்படுகிறது. பொது அறிவைக்கொண்டு இதை புரிந்துகொள்ளலாம். 10 பேர் கொண்ட குழுவில், ஒருவருக்கு மட்டும் சிறப்பு அதிகாரத்தை குழுவினர் கொடுக்கும்பட்சத்தில், மீதமுள்ள 9 பேரும் தங்களுடைய தனிப்பட்ட செல்வாக்கினை குறைத்துக்கொள்கின்றனர் என்றே பொருள். மனிதர்கள் பொதுவாக அப்படி செய்வதில்லை. ஒருவேளை அப்படிசெய்தாலும், அதன் பலனாகக் கிடைக்கும் சர்வாதிகாரம் நிபந்தனைகளுக்குட்பட்டதாகவே அமையும்: இரக்கமுள்ள சர்வாதிகாரி குழுவால் நியமிக்கப்பட்டார். அவரை பதவியிலிருந்து அகற்றவும் குழுவால் முடியும். ஆகவே, ஒரு தனிநபரின் தலைமையிலிருந்து, குழு சார்ந்த தலைமையை நோக்கி ஒரு குழு நகர்ந்த பிறகு, அது அரிதாகவே பழைய நிலைக்கு மாறுகிறது.
இந்த அமைப்புகளின் செயல்பாட்டு விவரங்கள் பெருமளவில் வேறுபட்டிருந்தாலும், இரண்டு பொதுவான அடிப்படைக்கூறுகள் உள்ளன: முதலாவதாக, குழுவினர், பெரும்பாலும், ஒருமித்த கருத்துடன் செயல்படுகின்றனர்; இரண்டாவதாக, ஒருமித்த கருத்து எட்டப்படாதபொழுது, முறைப்படுத்தப்பட்ட வாக்கெடுப்பு முறையை பின்பற்றுகின்றனர்.
குழுவிலுள்ள அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தையே ஒருமித்த கருத்து என்கிறோம். இது ஒரு தெளிவற்ற நிலையல்ல: குழுவிலுள்ள ஒருவர், ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாக முன்மொழியும்பொழுது, வேறுயாரும் அதை ஆட்சேபிக்கவில்லையெனில், அந்த குறிப்பிட்ட விவாதத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுவிட்டது என்று பொருள். அவ்வாறு முன்மொழியும் நபர், அந்த ஒருமித்த கருத்து என்னவென்பதையும், அதன் விளைவாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிடவேண்டும்.
ஒரு திட்டத்தில், பெரும்பாலும் நுட்பம் சார்ந்த விவாதங்களே நடைபெறுகின்றன. ஒரு வழுவை நீக்குவதற்கு சரியான முறையெது, ஒரு சிறப்பியல்பை திட்டத்தில் சேர்க்கவேண்டுமா இல்லையா, இடைமுகங்களை எவ்வளவு கடுமையாக ஆவணப்படுத்தவேண்டும், போன்றவை இவற்றுள் அடங்கும். இத்தகைய நுட்பம்சார்ந்த விவாதங்களுடன் தடையின்றி கலந்துவிடுவதால், ஒருமித்த கருத்தின் அடிப்படையிலான ஆட்சிமுறை சிறப்பாக செயல்படுகிறது. விவாதத்தின் முடிவில், எந்த மார்கத்தில் செல்லவேண்டும் என ஒரு பொதுவான ஒப்பந்தம் ஏற்படுகிறாது. வழக்கமாக ஒரு விவாதத்தின் இறுதியில், குழுவிலிருக்கும் யாரேனும் ஒருவர், எடுக்கப்பட்ட முடிவையும் ஒருமித்த கருத்தையும் தொகுத்து முன்மொழிவார். இதுவே, தனது ஆட்சேபனையை குழுவிற்கு தெரிவிப்பதற்கான கடைசி வாய்ப்பாகும்.
சிறிய, சர்ச்சைகளற்ற முடிவுகளில், ஒருமித்த கருத்தை முன்மொழிவது உள்ளார்ந்த ஒன்றாகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு உருவாக்குநர், வழுவிற்கான தீர்வை உடனடியாக நிரலில் ஒப்புவிக்கும்பொழுது, அதுவே அந்த வழு குறித்த ஒருமித்த கருத்தின் முன்மொழிவாகிறது: “இந்த வழு நீக்கப்படவேண்டும் என்றும், அதற்கான சரியான வழிமுறை இதுதானென்றும் நாம் அனைவரும் ஏற்கிறோம் என நான் கருதுகிறேன்”. இந்த கருத்தை வெளிப்படையாக உருவாக்குநர் கூறுவதில்லை; வழுவிற்கான தீர்வை மட்டுமே ஒப்புவிக்கிறார். திட்டத்தின் மற்ற உறுப்பினர்கள் தங்கள் ஒப்புதலையளிக்கவும் முற்படுவதில்லை. அவர்களின் மௌனம் சம்மதமாக ஏற்கப்படுகிறது. ஒருவேளை, ஒருமித்த கருத்தாக மாறாத தீர்வினை ஒருவர் ஒப்பிவிப்பின், அந்த நிரல்மாற்றம் நிகழவில்லையெனக்கருதி, மாற்றுக்கருத்துக்களை திட்டக்குழுவினர் விவாதிக்கின்றனர். நிரல்மாற்றம் ஒப்புவிக்கப்பட்ட பின்னரும், அதை நிகழாதவொன்றாக எவ்வாறு கருதமுடியும் என்பது அடுத்துவரும் பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது.
பதிப்பு கட்டுப்பாடு இருந்தால் நீங்கள் ஓய்ந்திருக்கலாம்
திட்டத்தின் மூலநிரல் பதிப்பு கட்டுப்பாட்டில் இருந்தால், பெரும்பாலான முடிவுகளை எளிதில் எட்டலாம். குழுவினர் அனைவரும் இந்த மாற்றத்தினை ஏற்றுக்கொள்வர் எனக்கருதி ஒரு நிரலர் ஒரு மாற்றத்தை ஒப்புவித்து, அதற்கு மறுப்புகள் எழும்பொழுது, ஒரு விவாதம் நடப்பது மிகவும் பொதுவானவொன்றாகும். பொதுவாக, இத்தகைய மறுப்புகளை முந்தைய விவாதங்களில் பங்கேற்காமல் போனதற்கு வருத்தம் தெரிவித்து துவங்குவது வழக்கம். ஒருவேளை மறுப்பு தெரிவிப்பவரால், விவாதப்பொருள் குறித்து முன்னர் நடந்த விவாதங்களின் பதிவுகளை காணமுடியவில்லையெனில், இவ்வாறு வருத்தம் தெரிவிக்கவேண்டியதில்லை. விவாதத்தின் தொனி, மாற்றத்தை ஒப்புவித்தபின் நடக்கிறதா, அல்லது மாற்றம் நிகழ்வதற்கு முன் நடக்கிறதா என்பதைப்பொருத்து மாறவேண்டியதில்லை. நிகழ்ந்த மாற்றம் சார்ந்து பிற மாற்றங்கள் நிகழாத வரையில், எந்தவொரு மாற்றத்தையும் திரும்பப்பெற்றுக்கொள்ளலாம். மோசமான அல்லது அவசர முடிவுகளை திருத்திக்கொள்வதற்கான வழிமுறையினை பதிப்பு கட்டுப்பாடு முறைமைகள், திட்டத்திற்கு வழங்குகின்றன. இதனால், ஒரு வேலையை செய்வதற்கு முன்னதாக, எவ்வளவு பின்னூட்டம் அவசியமென்பது குறித்து தங்கள் உள்ளுணர்வுகளை நம்புவதற்கான சுதந்திரத்தை குழுவினர் பெறுகின்றனர்.
இதனால், ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான வழிமுறை, மிகவும் முறைப்படுத்தப்பட்டதாக இருக்கவேண்டியதில்லை. பெரும்பாலான திட்டங்கள் உணர்வு ரீதியிலேயே இதனை கையாளுகின்றன. சிறிய மாற்றங்களை ஏற்படுத்த விவாதங்கள் ஏதும் தேவைப்படுவதில்லை. அல்லது, குறைந்த அளவிலான விவாதங்களும், சிலரது ஒப்புதல்களும் பெறப்படுகின்றன. நிரலின் பெரும்பகுதியின் நிலைத்தன்மையை பாதிக்கவல்ல, குறிப்பிடத்தகுந்த மாற்றங்களுக்கான ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு முன் ஓரிரு நாட்கள் காத்திருக்கவேண்டியது அவசியம். ஒரு சிலர் அடிக்கடி தனது மின்னஞ்சலை கவனிப்பதில்லை என்பதற்காக, முக்கியமான உரையாடல்களில் அவர்களை ஒதுக்கிவிடக்கூடாது என்பதே இதற்கு காரணம்.
ஆகையால், என்ன செய்யவேண்டுமென்று ஒருவர் உறுதியாக அறியும்பொழுது, தயக்கமின்றி அதை அவர் செய்யவேண்டும். நிரல்மாற்றங்களுக்கு மட்டுமல்லாமல், வலைதளத்தை மேம்படுத்தல், ஆவணங்களை மாற்றுதல் போன்ற எந்தவொரு சர்ச்சையற்ற விடயத்திற்கும் இது பொருந்தும். ஒரிசில நிகழ்வுகளில் மட்டுமே, மாற்றங்கள் நிறுத்தப்படவேண்டியிருக்கும். இவற்றை ஒவ்வொன்றாக கையாளலாம். நிச்சயமாக, முரட்டுத்தனமான நடத்தையை ஊக்குவிக்கக்கூடாது. விவாதத்திலிருக்கும் ஒரு விடயத்திற்கும், ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட விடயத்திற்கும் (திரும்ப்பபெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் கூட), உளவியல்ரீதியான வேறுபாடு இருக்கிறது. பெரும்பாலானோர், செயல்களை உத்வேகத்தோடு தொடர்புடையதாக கருதுகின்றனர். மேலும் ஒரு மாற்றத்தை தடுப்பதைவிட, அதை திரும்ப்பபெறுவதற்கு குழுவினர் அதிகம் தயங்குவர். இதனை தவறாக ஒரு நிரலர் பயன்படுத்தி, தொடர்ந்து சர்ச்சைக்குரிய மாற்றங்களை ஒப்புவித்தால், அதைக்குறித்து புகாரளித்து, விடயங்களில் முன்னேற்றம் தெரியும் வரை, அந்நிரலரை கடுமையான தரநிர்ணயத்திற்கு உட்படுத்தவேண்டும்.
ஒருமித்த கருத்து எட்டமுடியாதபோது வாக்களியுங்கள்
சில விவாதங்கள், ஒருமித்த கருத்தை எட்டாமல் போவதை தவிர்க்கமுடியாது. ஒரு முட்டுக்கட்டையான நிலையை சமாளிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடையும்பொழுது, வாக்களிப்பதே தீர்வாகிறது. ஆனால், வாக்களிப்பதற்கு முன்பு, தெளிவான தெரிவுகள் இருக்கவேண்டும். இங்கேயும், நுட்பவிவாதங்களின் நடைமுறை, திட்டத்தின் முடிவெடுக்கும் வழிமுறையோடு தற்செயலாக இணைந்துள்ளது. வாக்களிக்கவேண்டிய கேள்விகள், சிக்கலான பன்முகத்தன்மைகொண்ட பிரச்சனைகளை உள்ளடக்கியிருக்கிறது. இத்தகைய எந்தவொரு சிக்கலான விவாதத்திலும், வழக்கமாக ஓரிருவர் நேர்மையான தரகராக செயல்படுவர்: இடையிடையே, விவாதத்தை சுருக்கமாக தொகுத்தும், கருத்து வேறுபாடுகளின் மையப்புள்ளிகள் குறித்து கண்காணிக்கவும் செய்கின்றனர். விவாதத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஒவ்வொருவரும் அளவிட்டு அறியவும், மீதமுள்ள பிரச்சனைகள் குறித்து நினைவுபடுத்தவும் இந்த தொகுப்புகள் உதவுகின்றன. வாக்கெடுப்பு அவசியமாகும்பொழுது, இந்த தொகுப்புகளே, வாக்குச்சீட்டின் மாதிரியாகவும் பயன்படுகின்றன. நேர்மையான தரகர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்துவந்தால், அவர்களால், சரியான சமயத்தில் வாக்கெடுப்பிற்கான அழைப்பை விடுக்க இயலும். மேலும், அவர்களது தொகுப்புகளின் அடிப்படையில் அமைக்கப்பட்ட வாக்குச்சீட்டை பயன்படுத்த குழுவினர் தயாராக இருப்பர். இத்தரகர்களும் விவாதத்தில் பங்கெடுக்கலாம். குழுவிலுள்ள பிறரின் கருத்துக்களை புரிந்துகொண்டு, அதை பிரதிபலிப்பதோடு, தனது கருத்துக்களால் பாகுபாடு ஏற்படாமல், நடுநிலையோடு விவாதத்தின் நிலையை தொகுக்க முடியும்வரை, இத்தரகர்கள் விவாதகளத்திலிருந்து விலகியிருக்கவேண்டியதில்லை.
வாக்குச்சீட்டின் உள்ளடக்கம் பொதுவாக சர்ச்சைக்குரியதாக இருப்பதில்லை. வாக்களிக்கும் நிலையை விவாதம் எட்டும்பொழுது, பெரும்பாலான கருத்துவேறுபாடுகள் சில முக்கியமான விடயங்களுக்கு சுருங்கியிருக்கும். சிலசமயங்களில், யாரேனும் ஒரு உருவாக்குநர் வாக்குச்சீட்டை உருவாக்கவே ஆட்சேபனை தெரிவிப்பர். சிலசமயங்களில் அவரது கவலை முறையானதாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு முக்கியமான தெரிவு விடப்பட்டிருக்கலாம், அல்லது சரியாக விவரிக்கப்படாமலிருக்கலாம். மற்ற சமயங்களில், வாக்கெடுப்பின் முடிவு தனது விருப்பத்திற்கு எதிரானதாக இருக்கலாம் என்பதால், தவிர்க்க முடியாதவொன்றை தவிர்க்க முயலலாம். இத்தகைய தடைகளை எப்படி சமாளிப்பது என இப்பகுதியில் அறியலாம்.
வாக்கெடுப்பு முறையை மறக்காமல் குறிப்பிடவேண்டும். பலவேறுபட்ட வாக்கெடுப்புமுறைகள் இருப்பதால், எந்த முறையை பின்பற்றுவது என்பது குறித்து தவறான அனுமானங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பெரும்பாலான சமயங்களில் அங்கீகரிக்கும் வாக்கெடுப்பு முறை பொருத்தமானதாக இருக்கலாம். இதில், வாக்காளர், தான் விரும்பும் அனைத்து தெரிவுகளுக்கும் வாக்களிக்கலாம். இந்த முறையை விவரிப்பதும், இதில் வாக்கு எண்ணுவதற்கும், மற்ற முறைகளைவிட எளிமையாக இருக்கும்.பிற முறைகளைப்போல அல்லாமல், இந்த முறையில் ஒரேயொரு சுற்று வாக்கெடுப்பு மட்டுமே நடைபெறும். மேலும் சில வாக்கெடுப்பு முறைகளைப்பற்றி en.wikipedia.org/wiki/Voting_system இவ்விணைப்பிலிருந்து அறிந்துகொள்ளலாம். ஆனால், எந்த முறையில் வாக்கெடுப்பு நடைபெற வேண்டுமென்பது குறித்து நீண்ட விவாதங்களில் ஈடுபடவேண்டாம். அங்கீகரிக்கும் வாக்கெடுப்பு முறை மிகவும் நியாயமானதாக இருப்பதால், யாராலும் இம்முறைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது கடினமாக இருக்கும்.
இறுதியாக, வாக்கெடுப்பு பொதுவெளியில் நடைபெறவேண்டும். பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து வாக்களிக்கும்பொழுது இரகசியத்தன்மை அவசியமற்றதாகிறது. குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும், தங்களது வாக்குகளை மடலாடற்குழுவிற்கு அனுப்பச்செய்யவேண்டும். இதனால், ஒரு பார்வையாளரால், வாக்குகளை சரிசெய்து, முடிவுகளை சரிபார்த்துக்கொள்ள முடியும். வாக்கெடுப்பு குறித்த விவரங்களனைத்தும் காப்பகத்தில் பதிவுசெய்துவைக்கமுடியும்.
எப்பொழுது வாக்களிக்கவேண்டும்
வாக்கெடுப்பில் கடினமான விடயம், எப்பொழுது வாக்களிக்கவேண்டும் என்பது தான். பொதுவாக, வாக்கெடுப்பு மிகவும் அரிதானதாக இருக்கவேண்டும். மற்ற உத்திகளனைத்தும் தோல்வியடைந்தத பிறகு, கடைசி உத்தியாக வாக்கெடுப்பு இருக்கவேண்டும். விவாதங்களுக்கு தீர்வு காண்பதற்கு வாக்கெடுப்பு ஒரு சிறந்த முறையன்று. வாக்கெடுப்பு விவாதங்களை முடிவிற்கு கொண்டுவருகிறது. பிரச்சனைகுறித்து ஆக்கபூர்வமான சிந்தனையை தடுக்கிறது. விவாதம் நடைபெறும் வரை, யாரேனும் ஒருவர் பிரச்சனைக்கு, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு புதிய தீர்வினை கண்டறிய வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன. வியக்கத்தக்கவகையில், அடிக்கடி இம்மாதிரியான தீர்வுகள் கிடைக்கின்றன. ஒரு உயிர்ப்புள்ள விவாதம், புதிய சிந்தனைக்கு வித்திட்டு, அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை முன்மொழிய வழிவகுக்கிறது. புதிய தீர்வுகள் முன்மொழியப்படவில்லையென்றாலும், சமரசத்திற்கு வழிவகுக்கிறது. வாக்கெடுப்பு நடத்துவதை விட சமரசமடைவது சிறந்தது. சமரசத்திற்குப்பிறகு, குழுவினர் அனைவருக்கும் அதிருப்தி ஏற்படுகிறது. ஆனால், வாக்கெடுப்பிற்குப்பிறகு, சிலர் அதிருப்தியடைந்தாலும், பெரும்பான்மையானோர் மகிழ்ச்சியாகவே இருக்கின்றனர். அரசியல் நிலைப்பாட்டிலிருந்து பார்க்கும்பொழுது, முந்தைய நிலை விரும்பத்தக்கது: குறைந்தபட்சம், தனது வருத்தத்திற்கு ஓரளவிற்கு ஈடுகொடுக்கும் வகையில் முடிவு எட்டப்பட்டது என்ற உணர்வை ஒவ்வொருவருக்கும் தருகிறது. தன்னைப்போலவே அனைவரும் அதிருப்தியிலிருப்பது ஒவ்வொருவருக்கும் ஓரளவு ஆறுதலைத்தரும்.
விவாதங்களுக்கு தீர்வளித்து, அனைவரையும் முன்னேறிச்செல்லவைப்பதே வாக்கெடுப்பின் முக்கிய நன்மையாகும். ஆனால், இந்த தீர்வு, பகுத்தறிவுமிக்க கலந்துரையாடலின் அடிப்படையில் அல்லாமல், பெரும்பான்மையானோரின் விருப்பத்தை நோக்கி அனைவரையும் நகர்த்துகிறது. கட்டற்ற மென்பொருள் திட்டங்களில் மிகுதியான அனுபவமுள்ளவர்கள், வாக்கெடுப்பின் மூலம் விவாதங்களுக்கு தீர்வுகாண விரும்புவதில்லை. மாறாக, இதுவரை ஆலோசிக்கப்படாத தீர்வுகளைக்குறித்து ஆராய்வர். அல்லது, தனது ஆரம்ப நிலைப்பாட்டிலிருந்து இறங்கிவந்து சமரசம் செய்துகொள்ள முனைவர். வாக்கெடுப்பிற்கான சரியான பருவத்திற்கு முன்னதாக, அதை தவிர்ப்பதற்கு பல நுட்பங்கள் உள்ளன. “வாக்கெடுப்பிற்கு ஏதுவான நிலையை நாம் இன்னும் எட்டவில்லை” என அறிவிப்பது, இந்த நுட்பங்களுள் மிக எளிதானதும், அனைவரும் அறிந்ததும் ஆகும். மாற்றாக, முறைசாரா வாக்கெடுப்பின் முறையை பின்பற்றலாம். குழுவினர் தான் ஏற்றுக்கொண்ட தீர்விற்கு ஆதரவாக கைகளை உயர்த்துவதன் மூலம்,மற்ற பிற தீர்வுகளை ஆதரிப்போர், எளிதில் சமரசத்திற்கு உடன்பட ஆயத்தமாயிருப்பர். இதன்மூலம் முறையான வாக்கெடுப்பினை தவிர்க்கலாம். ஒரு புதிய தீர்வையோ, அல்லது பழைய தீர்வினை புதிய கோணத்திலோ எடுத்துரைப்பதன் மூலம், மீண்டும் மீண்டும் ஒரே விவாதத்தை முன்வைப்பதை விட்டுவிட்டு, பிரச்சனைகள் மீது மீண்டும் ஆக்கப்பூர்வமாக ஈடுபடவைக்கமுடியும்.
சில அரிதான தருணங்களில், சமரசத்துடன் கூடிய தீர்வுகள், சமரசமற்ற தீர்வுகளை விட மோசமானதாக இருப்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். அத்தருணத்தில், ஒரு சிறந்த தீர்வினை தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதற்காகவும், தீர்வினைப்பொருத்து குழுவினரிடம் அதிருப்தி மிகுதியாக இருக்காது என்பதாலும், வாக்கெடுப்பு நிராகரிக்க முடியாததாகிறது. இருந்தபோதிலும், அவசர அவசரமாக வாக்கெடுப்பு நடத்தக்கூடாது. வாக்கெடுப்பை நோக்கிய கலந்துரையாடல் தான், வாக்காளர்களுக்கு அறிவூட்டுகிறது. எனவே, அத்தகைய உரையாடலை தடுப்பது, வாக்கெடுப்பின் தரத்தை குறைத்துவிடும்.
(வாக்கெடுப்பு நடத்த தயங்கவேண்டும் என்ற அறிவுரை, இங்கே குறிப்பிடப்பட்டுள்ள, மாற்றத்தை சேர்ப்பதற்கான வாக்கெடுப்பு முறைக்குப்பொருந்தாது. இங்கே, வாக்கெடுப்பு என்பது, ஒரு மாற்றம் குறித்த தனது கருத்துக்களை பதிவுசெய்வதற்கான வழிமுறையாக இருக்கிறது. இதன் மூலம் ஒரு மாற்றம் எத்தனை விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது என அறியலாம்.)
யார் வாக்களிக்கவேண்டும்?
வாக்கெடுப்பு முறையின் முக்கியமான கேள்வி அதன் வாக்காளர்களைப் பற்றியது: வாக்களிப்பதற்கான வாய்ப்பு யாருக்கு வழங்கப்படுகிறது? திட்டத்தில் அதிக ஈடுபாடுள்ளவர்களாகவும், சிறந்த முடிவெடுக்ககூடியவர்களாகவும், குழுவின் சில உறுப்பினர்களை அங்கீகரிக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதால், இது மிகவும் உணர்ச்சிகரமான விவாதப்பொருளாக மாற வாய்ப்புள்ளது.
ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட ஒரு வேறுபாட்டினை (நிரல் மாற்றத்திற்கான அனுக்கம்) அடிப்படையாக வைத்து, வாக்குரிமையை வழங்குவது ஒரு சிறந்த தீர்வாகும். ஒரு சில திட்டங்களில், சில நிரலர்களுக்கு முழுமையான அணுக்கமும், சிலருக்கு பகுதி அணுக்கமும் அளிக்கப்பட்டிருக்கும். எதன் அடிப்படையில் பகுதி அணுக்கம் அளிக்கப்படுகிறதோ, அதே அடிப்படையில், பகுதி அணுக்கம் பெற்ற நிரலர்களின் வாக்குரிமையும் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவேளை, இவ்வணுக்கம் பலருக்கும் தாராளமாக வழங்கப்பட்டிருப்பின் (எ.கா: third-party library-களை பராமரிப்பதற்காக), இந்நிரலர்களுக்கு வாக்குரிமை கிடையாது என்பதை மிகத்தெளிவாக எடுத்துரைக்கவேண்டும். இதேபோல், ஒருவருக்கு முழு அணுக்கம் வழங்கும்பொழுது, அவரை வாக்களராகவும் நாம் தேர்ந்தெடுப்பதால், மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஒருவர், மிகச்சிறந்த நுட்பத்திறன்களைக் கொண்டிருந்தபோதிலும், மடலாடற்குழுவில் இடைஞ்சல் ஏற்படுத்தும் போக்கினை கடைபிடித்தால், அவருக்கு முழு நிரல் அணுக்கம் அளிப்பதில் குழுவினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
உருவாக்குநர்களுக்கு முழுமையான அல்லது பகுதி அணுக்கம் அளிப்பதற்கே ஒரு வாக்கெடுப்பு முறையை பின்பற்றவேண்டும். இத்தருணத்தில் ரகசியம் காக்கப்படவேண்டியது அவசியம். குழுவில் நிரலராக இணைய சாத்தியமுள்ள ஒருவர் குறித்த வாக்குகளை பொது மடலாடற்குழுவில் வைத்திருப்பது, அவரது உணர்வுகளை காயப்படுத்துவதோடு, நற்பெயரையும் பாதிக்கலாம். ஆகையால் ஒருவருக்கு நிரல் அணுக்கம் அளிப்பது குறித்து ஒரு தனிப்பட்ட மடலாடற்குழுவில் முன்மொழியலாம். அக்குழுவில் ஏற்கனவே அணுக்கம்பெற்ற ஒரு நிரலர்கள் மட்டுமே உறுப்பினர்களாகக்கொள்ளவேண்டும். இக்குழு தனிப்பட்ட குழுவாக இருப்பதால், பிற நிரலர்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக எடுத்துரைக்கமுடிகிறது. பெரும்பாலான நேரங்களில் அனைவரும் அணுக்கமளிக்க ஒப்புக்கொள்வதால், வாக்கெடுப்பு அவசியமற்றதாகிறது. குழுவிலுள்ள அனைவரும் பதிலளிக்க ஏதுவாக, சில நாட்கள் காத்திருந்த பின்னர், முன்மொழியப்பட்ட நிரலருக்கு அணுக்கமளிக்கப்படுகிறது. ஒருவேளை மறுப்பு தெரிவிக்கப்பட்டால், பிற கருத்துக்களும் கேட்கப்பட்டு, வாக்கெடுப்பில் முடிவடைகிறது. இந்த செயல்பாடு வெளிப்படையாகவும், ஒளிவுமறைவற்றும் இருக்கவேண்டுமெனில், இத்தகைய விவாதம் நடைபெறுகிறது என்பதே ரகசியமாக காக்கப்படவேண்டும். ஒருவேளை, முன்மொழியப்பட்ட நபருக்கு இவ்விவாதம் குறித்து தெரிந்தபின்னர், அவருக்கு அணுக்கம் வழங்கப்படவில்லையெனில், வாக்கெடுப்பில் தான் தோல்வியுற்றதாக தீர்மானித்து அவர் வருந்தநேரலாம். வெளிப்படையாக, ஒருவர் அணுக்கம் வேண்டுமென கோரும்பொழுது, அதை வெளிப்படையாக பரிசீலித்து ஏற்கவோ மறுக்கவோ செய்யலாம். ஒருவேளை அணுக்கம் மறுக்கப்பட்டால், அதை பணிவாக தெரியப்படுத்துவதுடன், அதற்கான தெளிவான விளக்கத்தையும் கொடுக்கவேண்டும்: “தாங்கள் சமர்பித்த ஒட்டுகளை நாங்கள் விரும்புகிறோம். ஆனால், இன்னும் போதுமான அளவு ஒட்டுகளை தாங்கள் சமர்பிக்கவில்லை" அல்லது, “தாங்கள் சமர்பித்த அனைத்து ஒட்டுகளையும் நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால், அவற்றை நிரலில் பயன்படுத்துவதற்கு முன்னதாக அதிக அளவு மாற்றங்கள் செய்யப்படவேண்டியிருந்ததால், தற்பொழுது தங்களுக்கு அணுக்கம் அளிக்கப்படவில்லை. காலப்போக்கில் இது மாறலாம் என நாங்கள் நம்புகிறோம்." அணுக்கம் வேண்டிய நபரின் தன்னம்பிக்கையைப்பொறுத்து உங்களது பதில் அவருக்கு பேரிடியாக இருக்கலாம். ஆகையால், தாங்கள் மின்னஞ்சலை எழுதும்பொழுது அந்த நபரின் கண்ணோட்டத்திலிருந்து சிந்தித்து எழுதவேண்டும்.
திட்டத்தில் ஒரேயொருமுறை மட்டும் எடுக்கப்படும் முடிவுகளில், ஒரு நிரல் மாற்றுநரை இணைப்பது மிகுதியான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகும். சில திட்டங்களில் வாக்களிப்பதற்கு சில சிறப்புத்தகுதிகள் தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாக, முன்வைக்கப்படும் தீர்வு, குறைந்தபட்சம் இத்தனை வாக்குகளை பெற்றிருக்கவேண்டும், எதிர்வாக்குகள் எதுவும் பெற்றிருக்கக்கூடாது, அல்லது அறுதிப்பெரும்பான்மை பெற்றிருக்கவேண்டும். சரியான அளவுருக்கள் என்னவென்பது இங்கே முக்கியமல்ல. புதிய நிரல் மாற்றுநர்களை சேர்ப்பது குறித்து குழுவினர் விழிப்புடன் இருக்கவேண்டுமென்பதே இதன் நோக்கம். இதுபோன்ற, அல்லது இன்னும் கடுமையான தகுதிகள் ஒரு நிரல் மாற்றுநரை நீக்குவதற்கான வாக்கெடுப்பிற்கும் பொருந்தும். ஆனால் அது அவசியமற்றதாக இருக்கவேண்டும் என்பதே அனைவரது விருப்பம். நிரல் மாற்றுநர்களை சேர்ப்பது மற்றும் நீக்குவது குறித்து வாக்கெடுப்பு சாராத அம்சங்கள் குறித்து, இவ்விணைப்பில், மேலும் அறிந்துகொள்ளலாம்.
கருத்துக்கணிப்புகளும் வாக்கெடுப்புகளும்
சில வகையான வாக்கெடுப்புகளுக்கு, வாக்காளர்களை விரிவுபடுத்துவது பயனுள்ளதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, பயனரின் பயன்பாட்டிற்கு ஏற்ற இடைமுகத்தை, உருவாக்குநர்களால் தேர்ந்தெடுக்க முடியவில்லையெனில், சந்தாதாரர்களை வாக்கெடுப்பில் இணைத்துக்கொள்வது ஒரு தீர்வாக அமையலாம். இவை கருத்துக்கணிப்புகளே அன்றி வாக்கெடுப்புகளல்ல. ஆனால், இதன் முடிவினை உருவாக்குநர்கள் ஏற்றுக்கொள்ளலாம். பிற கருத்துக்கணிப்புகளைப் போலவே, கொடுக்கப்பட்ட தெரிவுகளை விட சிறந்த தீர்வினை உள்ளிடுவதற்கான வசதியும் பங்கேற்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்தவேண்டும். இத்தகைய உள்ளீடுகள் கருத்துக்கணிப்பின் முக்கிய முடிவாக மாறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
தடுப்பதிகாரங்கள்
தடுப்பதிகார வாக்கு என்றழைக்கப்படும் சிறப்பு அதிகாரம் பெற்ற வாக்குகளை, சில திட்டங்கள் அனுமதிக்கின்றன. அவசரமாக செய்யப்படும் மாற்றங்களையும், சரியான முறையில் செய்யப்படாத மாற்றங்களையும், போதுமான அளவு அனைவரும் விவாதித்த பின்னர் ஒரு முடிவுக்கு கொண்டுவரும் வழிமுறையை இந்த தடுப்பு அதிகாரம் தருகிறது. முட்டுக்கட்டைகளுக்கும், கடுமையான எதிர்ப்பிற்கும் இடைப்பட்டதாக தடுப்பு அதிகாரத்தை கொள்ளலாம். இதன் பொருள் திட்டத்திற்கு திட்டம் மாறுபடலாம். சில திட்டங்களில் இந்த வாக்கினை ரத்துசெய்ய முடியாது; சில திட்டங்களில் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில், மேலும் தொடர்ந்து விவாதித்த பின்னர் இதனை ரத்துசெய்ய முடியும். முழுமையான விளக்கத்துடன் மட்டுமே ஒரு தடுப்பதிகார வாக்கு செலுத்தப்படவேண்டும். அத்தகைய விளக்கமளிக்காத தடுப்பதிகார வாக்குகள் செல்லாதவையாக கருதப்படும்.
தடுப்பதிகாரத்தை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது. விவாதம் முடிவடையாத சூழலில் கூட சில உருவாக்குநர்கள் தடுப்பதிகாரத்தை பயன்படுத்த ஆர்வமாயிருப்பர். இதுபோன்ற தவறான பயன்பாடுகளை தடுப்பதற்கு இரு வழிகள் உள்ளன. முதலாவதாக, உங்களுடைய தடுப்பதிகாரத்தை பயன்படுத்துவதற்கு அதிக தயக்கம் காட்டுங்கள். இரண்டாவதாக, தனது தடுப்பதிகாரத்தை அடிக்கடி பயன்படுத்துவோரிடம் அதுகுறித்து பணிவுடன் எடுத்துரையுங்கள். தடுப்பதிகாரம் விதிக்கும் கட்டுப்பாடுகளை குழுவினர் ஏற்றுக்கொள்ளும் வரை மட்டுமே அதற்கான மதிப்பு வழங்கப்படும் என்பதை தேவைப்படும்பொழுது குழுவினருக்கு நினைவூட்டுங்கள். ஏனெனில், பெரும்பான்மையானோர் ஒரு காரியத்தை செய்ய விரும்பும்பொழுது, அது ஏதேனும் ஒரு வகையில் நடந்தேதீரும். ஒன்று, தடுப்பதிகாரத்தை பயன்படுத்தும் நிரலர் பின்வாங்குவதன் மூலமாக நடக்கலாம், அல்லது, குழுவினர் தடுப்பதிகார வாக்கின் அதிகார வரம்பை குறைக்க முடிவெடுக்கலாம்.
தடுப்பதிகார வாக்கை பிரயோகிக்க, “-1” என்று குறிப்பிடுவதை நீங்கள் கண்டிருக்கலாம். இந்த பயன்பாடு, அபாசி மென்பொருள் அறக்கட்டளையிலிருந்து பெறப்பட்டது. அபாசி மென்பொருள் அறக்கட்டளை மிகுதியாக முறைப்படுத்தப்பட்ட வாக்களிப்பு மற்றும் தடுப்பதிகார வாக்கு செயல்முறைகளைக்கொண்டது. இதைப்பற்றி இவ்விணைப்பில் அறிந்துகொள்ளலாம். இந்த செயல்முறைகள் அபாசியிலிருந்து பிற திட்டங்களுக்கு பரவியிருக்கின்றன. கட்டற்ற மென்பொருள் உலகில் இதுபோன்ற மரபுகள் பல்வேறு அளவுகளில் பின்பற்றப்படுவதை நாம் காணலாம். அபாசி தரங்களின் அடிப்படையில், “-1” குறியீடு முறையான தடுப்பதிகார வாக்கினை குறிப்பதில்லை. ஆனால், பெரும்பான்மையான தருணங்களில் அது முறைசாரா தடுப்பதிகார வாக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. குறைந்தபட்சம், மிகக்கடுமையான எதிர்ப்பை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
வாக்குகளைப்போலவே, தடுப்பதிகார வாக்குகளும் பின்னோக்கி செலுத்தப்படலாம். விவாதத்திலிருக்கும் மாற்றம் ஏற்கனவே நடந்துவிட்டது என்பதற்காக ஒரு தடுப்பதிகார வாக்கை எதிர்ப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. மாற்றமுடியாத விடயங்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு (எ.கா: ஊடகங்களின் செய்தி வெளியீடு). மாறாக, அதிக காலம் தாழ்த்தி செலுத்தப்படும் தடுப்பதிகார வாக்குகள் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. அதை தீவிரமாக எடுத்துக்கொள்வதற்கான அவசியமும் இல்லை.
அனைத்தையும் ஆவணப்படுத்தவேண்டும்
ஒரு தருணத்தில், உங்கள் திட்டத்தில் பின்பற்றப்படவேண்டிய மரபுகளும், அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட முடிவுகளும் எண்ணிக்கையில் மிகுதியாகும்பொழுது அவற்றை பதிவு செய்யவேண்டியது அவசியம். மடலாடற்குழுவில் நடந்த விவாதங்களின் அடிப்படையிலும், ஏற்கனவே அமலிலுள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையிலும் தயாரிக்கப்படும் ஆவணம் சட்டப்பூர்வமானதாகிறது. மடலாடற்குழுவின் காப்பகத்திலுள்ள தொடர்புடைய மடல்களை, இந்த ஆவணத்தில் குறிப்பிடவேண்டும். ஏதேனும் ஒரு விடயத்தில் தெளிவில்லாமல் இருப்பின், மீண்டும் குழுவினரிடம் அது குறித்து கேட்டறியவேண்டும். இந்த ஆவணத்தில் வியப்பளிக்கும் தகவல்கள் ஏதும் இருக்ககூடாது: இது ஒப்பந்தங்களின் விளக்கமேயன்றி, அவற்றின் மூலமல்ல. ஒருவேளை இத்தொகுப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அதிகாரங்களின் மூலமாக, இதனை குழுவினர் மேற்கோள்காட்டுவதுண்டு. குழுவினர் அனைவரின் ஒட்டுமொத்த விருப்பத்தையும் இந்த ஆவணம் துல்லியமாக பிரதிபலிக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
தொடக்கத்தில், மறைமுகமாக குறிப்பிடப்பட்ட ஆவணம் இதுவேயாகும். திட்டத்தின் தொடக்ககாலத்தில், திட்டத்திற்கான கடந்த கால வரலாறு இல்லாத காரணத்தால், சில நெறிமுறைகளை வகுக்கவேண்டியது அவசியமாகிறது. காலப்போக்கில், உருவாக்குநர் குழு முதிர்ச்சியடையும்பொழுது, அதற்கேற்றார்போல், இதனை மாற்றியமைத்துக்கொள்ளலாம்.
விரிவான ஆவணத்தை தயாரிக்க முயலவேண்டாம். எந்தவொரு ஆவணத்திலும், ஒரு திட்டத்தில் பங்கேற்பதற்குத் தேவையான அனைத்து தகவல்களையும் உள்ளடக்க முடியாது. திட்டத்தில் பரிணமிக்கும் பெரும்பாலான மரபுகள் குறித்து யாரும் எப்பொழுதும் வெளிப்படையாக குறிப்பிடுவதில்லையென்றபோதும், அனைவராலும் பின்பற்றப்படுகிறது. மிகவும் தெளிவாகவும், வெளிப்படையாகவும் இருக்கும் விடயங்களை, ஆவணத்தில் குறிப்பிடத்தேவையில்லை. அவை முக்கியமான, தெளிவற்ற பிற விடயங்களிலிருந்து கவனத்தைச் சிதறடிக்கும். எடுத்துக்காட்டாக, “மடலாடற்குழுவில் பிறரிடம் பணிவுடனும், மரியாதையுடனும் நடந்துகொள்ளவேண்டும். தனிமனித தாக்குதல்களில் ஈடுபடக்கூடாது.” அல்லது, “தெளிவான, படிக்கக்கூடிய, வழுக்களற்ற நிரலை எழுதவேண்டும்" என்பன போன்ற நெறிமுறைகள் பயனற்றவை. இவை விரும்பத்தக்க நெறிமுறைகளாக இருப்பினும், இவற்றை விரும்பாத எவரையும் நம்மால் மனதாலும் நினைத்துப்பார்க்க இயலாது. எனவே, இவற்றை குறிப்பிடுவது அவசியமற்றது. ஒரு வேளை, சிலர் மடலாடற்குழுவில் முரட்டுத்தனமாக நடந்துகொண்டாலோ, வழுவுள்ள நிரலை எழுதிவந்தாலோ, திட்டத்தின் நெறிமுறைகளில் இவற்றை குறிப்பிடுவதன் மூலம் மட்டுமே, அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ளப்போவதில்லை. அப்படியொரு நிலை எழும்பொழுது, சூழலுக்கேற்ப நடவடிக்கை எடுக்கவேண்டுமேயொழிய, பொதுவான அறிவுரைகளால் எந்த பயனுமில்லை. மாறாக, ஒரு திட்டத்தில், நல்லவிதமாக நிரலெழுதுவது எப்படியென, (எடுத்துக்காட்டாக, API-ஐ குறிப்பிட்ட வடிவத்தில் ஆவணப்படுத்தவேண்டும்), குறிப்பிட்ட வழிமுறைகளிருப்பின் அவற்றை முடிந்தவரையில் முழுமையாக ஆவணப்படுத்தவேண்டும்.
திட்டத்தின் புதிய உறுப்பினர்கள் அடிக்கடி எழுப்பும் கேள்விகளின் அடிப்படையிலும், அனுபவமிக்க உருவாக்குநர்கள் அடிக்கடி எழுப்பும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும், இந்த ஆவணத்தின் உள்ளடக்கத்தை முடிவுசெய்வது சிறந்த வழியாகும். அடிக்கடி கேட்கப்ப்டும் கேள்விகளின் தொகுப்பாக மட்டும் இல்லாமல், ஒத்திசைவுடன் எடுத்துரைக்கும் வடிவமைப்புடன் இந்த ஆவணம் இருக்கவேண்டும். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளின் தொகுப்பு போல, இந்த ஆவணத்தில், உண்மையான பிரச்சனைகள் குறித்து விவரிக்கவேண்டுமே தவிர, பிற்காலத்தில் ஏற்படலாம் என நாம் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் குறித்து விவாதிக்கக்கூடாது.
இரக்கமுள்ள சர்வாதிகாரத்தை பின்பற்றும் திட்டங்களிலும், சிறப்பு அதிகாரம் பெற்ற அதிகாரிகள் உள்ள திட்டங்களிலும், அடுத்து வரும் அதிகாரிகளிடம் பொறுப்பை ஒப்படைக்கும் வழிமுறையாக இந்த ஆவணம் உதவுகிறது. சில சமயங்களில், இரக்கமுள்ள சர்வாதிகாரி ஒரு திட்டத்திலிருந்து வெளியேற நேரிட்டால், அவருக்குப்பதிலாக சிலரின் பெயரை குறிப்பிடுவது போல எளிமையானதாக இருக்கலாம். பொதுவாக, இரக்கமுள்ள சர்வாதிகாரிகள் இருக்கும் திட்டத்தில், அவர் மட்டுமே தனக்கடுத்த இரக்கமுள்ள சர்வாதிகாரியை நிர்ணயிக்கமுடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் இருக்கும் திட்டத்தில், அதிகாரிகளின் முன்மொழிவு மற்றும் தேர்வு குறித்த செயல்முறைகள் ஆவணத்தில் விவரிக்கப்படவேண்டும். ஒருவேளை அப்படியொரு செயல்முறை இல்லையெனில், ஒரு செயல்முறையை உருவாக்குவது குறித்து, மடலாடற்குழுவில் ஒருமித்த கருத்தை எட்டிய பின்னர், அதை ஆவணப்படுத்தவேண்டும். படிநிலை அமைப்புகள் என்பது உணர்வுரீதியிலானது என்பதால், இதனை கவனத்துடன் கையாளவேண்டியது அவசியம்.
இந்த விதிகள் மறுபரிசீலனைக்குட்பட்டவை என்பதை குழுவினருக்கு தெளிவாக்கவேண்டும். இந்த ஆவணத்தில் குறிப்பிடப்படும் மரபுகள் திட்டத்திற்கு ஊறு விளைவிக்க ஆரம்பிக்கும்பொழுது, இந்த ஆவணம் குழுவின் எண்ணங்களின் பிரதிபலிப்பாக இருக்கவேண்டுமே தவிர, விரக்திக்கு மூலமாகவும், தடைக்கல்லாகவும் இருக்கக்கூடாது என்பதை நினைவுறுத்தவேண்டும். தனது வழியில் விதிகள் குறுக்கிடும்போதெல்லாம், அவற்றை மறுபரிசீலனை செய்யுமாறு கோரும் பழக்கமுடையவர்களுடன் மீண்டும் மீண்டும் விவாதிக்கவேண்டியதில்லை. சில சமயங்களில் மௌனமாக இருந்துவிடுவதே சிறப்பு. இந்த புகார்களுடன் பிறர் உடன்படும்பொழுது, அவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்து, இந்த மாற்றம் அவசியமென்பதை தெளிவுறச்செய்வர். வேறு எவரும் அந்த புகாருடன் உடன்படாதபொழுது, அந்த நபருக்கு யாரும் பதிலளிப்பதில்லை. மேலும் விதிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படுவதில்லை.
திட்ட நெறிமுறைகளுக்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாக, சப்வெர்சன் சமூகத்தின் கையேட்டையும்subversion.apache.org/docs/community-guide/, அபாசி மென்பொருள் அறக்கட்டளையின் ஆட்சிமுறை ஆவணங்களையும்apache.org/foundation/how-it-works.htmlapache.org/foundation/voting.html சொல்லலாம். அபாசி மென்பொருள் அறக்கட்டளை என்பது பல மென்பொருள் திட்டங்களின் தொகுப்பாகும். சட்டபூர்வமாக முறைப்படுத்தப்பட்ட லாபநோக்கற்ற நிறுவனம். எனவே, அதன் பெரும்பாலான ஆவணங்கள் நிரலாக்க வழிமுறைகளைவிட, ஆட்சிமுறைக்கான செயல்முறைகளைப் பற்றியதாகவே இருக்கின்றன. இருப்பினும், எண்ணற்ற கட்டற்ற திட்டங்களின் அனுபவத்தை அவை தன்னகத்தே கொண்டிருப்பதால், அவை வாசிக்கத்தகுந்தவையாக உள்ளன.
இலாபநோக்கற்ற அமைப்பில் இணைதல் அல்லது உருவாக்குதல்
24 மார்ச் 2013: இந்த குறிப்பை நீங்கள் வாசித்துகொண்டிருந்தால், இந்த பகுதி ஒரு கணிசமான மாற்றத்திற்கு உட்பட்டுக்கொண்டிருக்கிறது என்று பொருள். மேலும் விவரங்களுக்கு producingoss.com/v2.html பார்க்கவும்.
poss2 tbd
Mention Software Freedom Conservancy, SPI, ASF, GNOME,
any others. Note "non-profit" vs "not-for-profit". Mention Kuali et
al as models. Problems of consortiums. Don't assume the U.S. tax
code benefit is familiar everywhere. Emphasize clear separation
between the legal infrastructure and the day-to-day running of the
project: the organization is there to take care of the things the
developers don't want to deal with, not to interfere with the things
the developers already know how to do. Explain fiscal sponsorship
when talking about fundraising. Note trademark ownership as well as
copyright ownership, and link to this section as appropriate from the
licensing/copyrights chapter and from the money / corporate
involvement chapter.